விழுவதெல்லாம் எழுவதற்கே என்பதை அறிந்த நீங்கள் ஏற்ற இறக்கங்களைக் கண்டு அஞ்ச மாட்டீர்கள். சிக்கல்களின் ஆணிவேரை அறிவீர்கள். இந்த மாதம்
உங்கள் ராசிக்குள் சூரியன் நுழைந்திருப்பதால் உடல் ஆரோக்யத்தில் கவனம் செலுத்தப் பாருங்கள். காரம் மற்றும் வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. எளிதில் செரிமானமாகக் கூடிய உணவுகளை உட்கொள்ளுங்கள். மார்ச் 1ந் தேதி வரை செவ்வாய் உங்கள் ராசிக்குள் நிற்பதால் தூக்கம் குறையும். எதிர்மறை எண்ணங்கள் வரும். சின்னச் சின்ன விஷயங்களையும் போராடி முடிக்க வேண்டி வரும்.
மார்ச் 2ந் தேதி முதல் செவ் வாய் ராசியை விட்டு விலகுவதால் கொஞ்சம் நிம்மதி உண்டாகும். உடல் உஷ்ணம், வயிற்று வலி குறையும். முன்கோபம் விலகும். ஆனால், பணத் தட்டுப்பாடு, கொடுக்கல், வாங்கல் பிரச்னைகள் இருக்கும். 4ல் குரு நீடிப்பதால் யாரை நம்புவது, நம்பாமல் இருப்பது என்ற குழப்பம் வரும். தாயாரை சரியாக கவனித்துக் கொள்ள முடியவில்லையே என்ற ஆதங்கமும் அடிமனதில் வந்துபோகும். சில நேரங்களில் சூழ்நிலை கைதியாக சிக்கிக் கொள் வீர்கள். உங்கள் ராசிநாதனான சனிபகவான் உச்சம் பெற்றிருப்பது ஒருவகையில் நல்லதுதான்.
ஆனால், ராகுவுடன் நிற்பதால் ஒருபயம் வரும். கடந்த காலத்தில் கிடைத்த நல்ல வாய்ப்புகளையெல்லாம் சரியாகப் பயன்படுத்தாமல் விட்டுவிட்டோமே என்றெல்லாம் வருந்துவீர்கள். உங்கள் ராசிக்கு பூர்வ புண்ணியாதிபதியான புதன் இந்த மாதம் முழுக்க உங்கள் ராசியிலேயே அமர்ந்திருப்பதால் சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள. அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். பிள்ளைகளும் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். உங்கள் ராசிக்கு பிரபல யோகாதிபதியான சுக்கிரன் சாதகமாக இருப்பதால் உங்களின் எதிர்பார்ப்புகள் சற்றே தாமதமானாலும் நல்ல விதத்தில் முடிவடையும். ஓரளவு பணப்புழக்கம் உண்டு.
அரசியல்வாதிகளே! சிலர் உங்கள் பெயரை தவறாகப் பயன்படுத்துவார்கள்.
கன்னிப் பெண்களே! உங்களின் திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும்.
மாணவர்களே! கல்யாணம், திருவிழா என்று அலையாமல் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். புதிதாக அறிமுகமாகும் நண்பர்களிடம் கவனமாகப் பழகுங்கள்.
வியாபாரம் ஓரளவு தழைக்கும். உங்களுக்கு உதவுவதற்கு சிலர் முன்வருவார்கள். வேற்று மொழிக்காரர்கள் சாதகமாக இருப்பார்கள். வேலையாட்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். சந்தை நிலவரத்தை அவ்வப்போது உன்னிப்பாக கவனித்து அதற்கேற்ப செயல்படப் பாருங்கள். கமிஷன் வகைகளால் லாபமடைவீர்கள்.
உத்யோகத்தில் அலைச்சல்களும், சிறுசிறு அவமானங்களும் வரக்கூடும். வேலையை விட்டுவிடலாமா என்ற எண்ணமும் வரக்கூடும். அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். 22ந் தேதி முதல் மனோபலம் கூடும். அலுவலகப் பிரச்னைகளை சந்திக்கும் பக்குவம் உண்டாகும்.
கலைத்துறையினரே! வருமானம் உயர வழி பிறக்கும்.
விவசாயிகளே! வாய்க்கால், வரப்புச் சண்டை களுக்கெல்லாம் சுமுகமான தீர்வு கிடைக்கும். முன்கோபம், விவாதங்களைத் தவிர்க்க வேண்டிய மாதமிது.
ராசியான தேதிகள்:
பிப்ரவரி 13, 14, 15, 16, 22, 23, 24, 25, 26 மார்ச் 4, 5, 6, 7, 13
சந்திராஷ்டம தினங்கள்:
பிப்ரவரி 27ந் தேதி காலை 8.30 மணி முதல் 28 மற்றும் 1ந் தேதி மதியம் 1.30 மணி வரை புதிய முயற்சிகள் தள்ளிப்போய் முடியும்.
பரிகாரம்:
சென்னை - திருவல்லிக்கேணி பார்த்தசாரதியை தரிசித்துவிட்டு வாருங்கள். அன்னதானம் செய்யுங்கள்.
0 comments:
Post a Comment